நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திடம் இருந்து கூட்டுறவு மொத்த  விற்பனை நிலையம் 55000 மெற்றிக் தொன் நெல்லை உடனடியாகக் கொள்வனவு செய்து அதனைக் குற்றி லங்கா சதொச நிலையத்திற்கு வழங்குவதென்ற முடிவை வாழ்க்கைச் செலவுக் குழு மேற்கொண்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழு பாராளுமன்றத்தில் கூடிய போது அரிசியைத் தட்டுப்பாடில்லாமல் நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திலிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் லங்கா சதொச நிலையங்களுக்கு குற்றரிசியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நெல்லைக் குற்றுவதற்கு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் 2 ஆலைகள் பயன்படுத்தப்படுமெனவும் அதனைவிட தனியார் ஆலைகளிலும் இந்த செயற்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இந்த வார முடிவுக்குள்ளேயே நெல்லைக் கொள்வனவு செய்துவிடும் எனவும் அதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *