அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் அழைப்பை ஏற்று கட்சியின் தலைவரும் அமைச்சமான ரிஷாட் பதியுதீன், கொழும்பு, மட்டக்குளி காக்கைத் தீவு பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறிந்து கொண்டார்.

அமைச்சருடனான இச்சந்திப்பின் போது, மன்னார், மட்டக்களப்பு இன்னும் பிற மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்குளி, காக்கை தீவில் வாழும் 130 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி வாழ்வதாகவும், நீண்டகாலமாக பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாகவும் அந்த மக்கள் அமைச்சருக்குத் தெரியப்படுத்தினர்.  மேலும் சுகாதாரமற்ற கழிவறைகளைப் பயன்படுத்துவதின் மூலம் சிறுவர்களும் முதியோர்களும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு ஆளாகுவதாகவும் அம்மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுவரை யாரும் தம்மை சந்தித்து, தமது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து தமக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் ஆதங்கப்பட்டனர்.

இந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வீட்டுப்பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக, அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

 அத்துடன் உடனடியாக தனது நிதியொதுக்கீட்டில் கழிவறை வசதிகள் அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *